Thursday, March 19, 2015

ஆசிரியருக்கு ஒரு கடிதம்

கல்கி பத்திரிகையில் வாசகர் கடிதங்களை வட்டமேஜை என்ற  தலைப்பில் வெளியிடுவார்கள். 1-06-75 கல்கி இதழில் வெளியான தலையங்கம் குறித்து   30-05-75 தேதியிட்டு நான் அனுப்பிய கடிதம் இது. (1-06-75 (ஞாயிறு) தேதியிட்ட கல்கி இதழ் 29-05-75 வியாழன் அன்றே கடைகளில் விற்பனைக்கு வந்திருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டால் என் கடிதம் எழுதப்பட்ட தேதி பத்திரிகையின் தேதிக்கு முந்தியதாக எப்படி இருந்திருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்!) இந்தக் கடிதம் கல்கி பத்திரிகையில் வெளியாகவில்லை. மத்திய அரசின் இந்தித் திணிப்பும், தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மெத்தனமும் இன்று வரை அப்படியேதான் இருக்கின்றன!

வட்டமேஜை
அன்புள்ள ஆசிரியருக்கு,
1-06-75 தேதியிட்ட 'கல்கி'யின் தலையங்கம் தமிழக மக்களால் பெரிதும் அசட்டை செய்யப்பட்டு வரும் மத்திய அரசின் அபாயகரமான இந்தித் திணிப்பைப் பொது மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. 

தமிழக அரசியலின் மும்மூர்த்திகளையும் குறிப்பிட்டு, இந்த விஷயத்தில் அவர்கள் அலட்சியமாக இருப்பதைச் சுட்டிக் காட்டித் தாங்கள் வருந்தியிருக்கிறீர்கள். ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள் என்று நம்புவதற்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை.

இந்தித் திணிப்பை, தமிழகத்தைத் தவிர மற்ற தென் மாநிலங்கள் அநேகமாக அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. எனவே இந்தி ஆதிக்கத்துக்கான எதிர்ப்பு தமிழகத்தில்தான் உருவாக வேண்டும்.

நேருவின் காலத்தில் தயக்கத்துடனும், சாஸ்திரியின் காலத்தில் அலட்சியத்துடனும் நடைபெற்ற இந்தித் திணிப்பு, இந்திரா காந்தியின் ஆட்சியில் அதிகார மமதையுடன் நம்மீது திணிக்கப்படுகிறது. 

வெறும் கண்டனங்களினாலோ, வாதங்களினாலோ மத்திய அரசை நிதானப்படுத்த இயலாது. இந்தித் திணிப்பின் வேகத்தையாவது அவர்கள் குறைக்க வேண்டுமென்றால், அதற்கு ஜெ.பி இயக்கத்தைப்போன்ற ஒரு பிரம்மாண்டமான இயக்கம் தேவை.

அத்தகைய இயக்கத்தைத் தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தும் சக்தி படைத்த மூன்று தலைவர்களின் நிலை எப்படி இருக்கிறது?

அகில இந்திய அரசியலில் தாம் வகிக்கப் போகும் பங்கைப்பற்றி இன்னமும் ஒரு நிச்சயமான முடிவுக்கு வராத காமராஜ் இதைச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. சிறிது காலத்துக்கு முன்பு இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரலெழுப்பியவர் இப்போது மௌனியாகி விட்டார்.

எம் ஜி ஆரைப் பொறுத்தவரை, அவர் இந்திரா காங்கிரஸின்  உறவை நாடிக் காத்திருக்கும் இந்தச் சமயத்தில் தமிழக மக்களின் உரிமைக் குரல் இவர் தொண்டையிலிருந்து எப்படி எழும்பும்?

1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டவரும், 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காமராஜைத் தோற்கடித்தவருமான பெ.சீனிவாசன், அ.தி.மு.கவுக்குத் தாவிய பிறகு, "தமிழக மக்கள் இந்தி கற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை" என்று சட்டமன்றத்தில் திருவாய் மலர்ந்தருளினார். இந்தி எதிர்ப்பில் அ.தி.மு.கவின் நிலை என்ன என்று புரிந்து கொள்வதற்கு இந்தப் பேச்சே சான்று!

இனி வரும் காலங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தக்கூடிய ஒரே கட்சி தி.மு.க.தான். வரும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமரும் நிலை ஏற்பட்டால் தி.மு.க. இதைச் செய்ய நிச்சயம் வாய்ப்பு உண்டு. அதுவரை?

சில ஆண்டுகளுக்குமுன் நாடாளுமன்றத்தில்  இந்தித் திணிப்பை எதிர்த்து ஒரு மசோதாவைத் தி.மு.க எம்.பி.க்கள் தாக்கல் செய்தனர். ஆனால் வாக்கெடுப்பின்போது , 25 தி.மு.க. எம்.பி.க்களில் மூன்று பேர் மட்டுமே சபையில் இருந்தனர்! இந்தி எதிர்ப்பில் தி.மு.கவுக்கு இருக்கும் அக்கறை இவ்வளவுதான்!

மாணவர்களுக்கு இப்போது இந்தி எதிர்ப்பில் ஆர்வம் இல்லை. ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது வேறு, ஒரு மொழி திணிக்கப்படுவதை எதிர்ப்பது வேறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இந்தி கற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற இவர்களது விரக்தி மனப்பான்மையைப் பயன்படுத்திக் கொண்டு, 'தமிழக மக்கள் இந்தியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்' என்று ஆக்கிரமப்பாளர்களும் அவர்களுக்குத் துணை போகிறவர்களும் கூக்குரலிடுகிறார்கள்.

முன்பு உதட்டளிவில் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கொண்டிருந்த சி.சுப்பிரமணியம் போன்ற காங்கிரஸ்கரர்கள், இப்போது தங்கள் ஒப்பனையைக்  கலைத்து விட்டு, 'தமிழர்கள் இந்தி கற்றுக்கொண்டுதான் தீர வேண்டும்' என்று கட்டளையிடத் துவங்கி விட்டார்கள்.

தமிழ்நாட்டில் சில இந்திப் படங்கள் வெற்றிகரமாக ஓடுவதைச் சுட்டிக் காட்டி, தமிழர்கள் இந்தியை ஏற்றுக் கொண்டு விட்டதாகச் சிலர் வாதம் புரிகிறார்கள். நல்லவேளை! சில தமிழ்ப்படங்கள் சரியாக ஓடவில்லை என்பதைக் காரணம் காட்டித் தமிழர்கள் தமிழை எதிர்க்கிறர்கள் என்று சொல்லாமல் போனார்களே!

இந்தி ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு இன்று அறிஞர்களிடமிருந்துதான் வெளிப்பட வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. 

சமீபத்தில் உலகத் தெலுங்கு மாநாட்டுல் பேசிய சென்னைப் பல்கலைக் கழகத்தின் இந்தித் துறைத் தலைவர் பேராசிரியர் சங்கரராமராஜு அவர்கள் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசுவது தெலுங்குதானே தவிர இந்தி அல்ல என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தை மறுத்துக் கூறுமாறு இவர் விட்ட அறைகூவலை இதுவரை யாரும் ஏற்றதாகத் தெரியவில்லை.  

'இலக்கியச் சிந்தனை' கூட்டம் ஒன்றில் பேசும்போது, 'துளசி ராமாயணம் எழுதப்பட்டது இந்தியில் அல்ல, 'அவதி' என்ற மொழியில் என்றும் இவர் குறிப்பிட்டார்.

இவரைப் போன்ற அறிஞர்கள் தங்கள் கருத்துக்களைத் துணிந்து கூறி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்தித் திணிப்பை எதிர்க்க இன்றுள்ள ஒரே வழி என்று தோன்றுகிறது. 

இவ்வாறு குரல் கொடுப்பவர்கள் எல்லாம், 'ஃபாஸிஸ்டுகள்,' 'சி.ஐ.ஏ. ஏஜண்டுகள்,' 'தேச ஒற்றுமையைச் சீர்குலைக்கும் சக்திகள்' என்றெல்லாம் இந்திரா காந்தியாலும் அவரது சீடர்களாலும் வசைபாடப் படுவதை ஏற்றுக்கொள்ள இவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

அடிப்படை உரிமைகள் பற்றிய வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் வாதிட்டபோது, 'தங்கள் அடிப்படை உரிமைகள் பறிபோவதைக் கண்டு மக்கள் கொதித்தெழாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் உறக்கநிலையில் (lethargy) இருப்பதுதான்' என்று பல்கிவாலா குறிப்பிட்டார்.

இந்தி ஆக்கிரமிப்பைப் பொறுத்தமட்டில், இந்தி பேசாதாரின் நலன்கள் பலியாவதை உணராமல், தென்னிந்திய மக்கள் உறக்க நிலையில்தான் இருக்கிறார்கள். 

இந்த உறக்க நிலையிலிருந்து அவர்கள் (நாம்) விழித்தெழாவிட்டால், ஆக்கிரமிப்பு வெள்ளத்தில் தங்கள் உரிமைகளும், நலன்களும் அடித்துச் செல்லப்படுவதைத் தடுக்க வகையின்றி நாம் அனைவரும்கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.

Thursday, March 5, 2015

அகில பாரத நாடகம்

பொதுவாக அகில பாரத நாடகம் என்ற பெயரில் ஒலிபரப்பப்படும் நாடகங்கள் குறைவான பாத்திரங்களையும், நிறைய உரையாடல்களையும், அதை விட அதிகமான அளவில் பெருமூச்சுக்களையும், விம்மல்களையும், போனால் போகட்டும் என்று கடுகளவு கதைக்கருவையும் கொண்டிருக்கும். ஆனால் இந்த மாதம் ஒலிபரப்பபட்ட 'ஒரு கீதத்தின் மரணம்' என்ற நாடகத்தைப் பற்றி அவ்வளவு அலட்சியமாகச் சொல்லி விடுவதற்கில்லை.

ஒரு மகாராஜாவால் வளர்க்கப்பட்டு வரும் ட்யூக் என்ற நாய்க்கும், ஜாலி என்ற மானுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பின்னணியாக வைத்து அழகாகத் தீட்டப்பட்டிருக்கும் பிரசித்தி பெற்ற ஒரியா எழுத்தாளரின் கதையின் அழகு, நாடகமாக்கப்பட்ட விதத்தில் சிதையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாலியின் மரணத்துக்கான சூழ்நிலையை உருவாகியிருப்பதில் சோகமும், பரிதாபமும் இழையோடினாலும், விருந்துபசாரத்தில் மகாராஜா அத்தனை தீவிரமாக இருக்க வேண்டுமா? மானைக் கொல்வதில்லை என்று தன் மகளுக்கு வாக்களித்திருப்பதைச் சொல்லியிருக்கலாமே! கோளாறு நாடக ஆக்கத்தில்தான் இருக்க வேண்டும்.

இது போன்ற நாடகங்களை ஒலிபரப்புவதன் மூலம்  மற்ற மொழி இலக்கியங்களை நாம் அறிந்து கொள்ள உதவும் அகில இந்திய வானொலியின் பணி மேலும் சிறக்கட்டும்.